Wednesday, 20 July 2011

என்னை உரசிச் சென்ற ஏதோ ஒரு சம்பவத்தை வைத்துதான் கதை பின்னுகிறேன்-எழுத்தாளர் புதுகை சஞ்சீவி.

கே: உங்கள் இளமை காலங்கள் பற்றி?
ப: சைக்கிளில் தெருத் தெருவாக ஐஸ் விற்றது, பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணி, காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கியது, சைக்கிள் உதிரி பாகம் தயாரிக்கும் கம்பெனியில் ஹெல்பர் வேலை, சென்னையில் ஹோட்டலில் இலை எடுத்து மேசை துடைத்து, மதுரை உலகனேரி அருணா மெசின்  டூல்ஸ் கம்பெனியில் காண்ட்ராக்ட்  கூலியாள், திருப்பூரில் சாயப்பட்டரைப் பணியால், தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்வதற்கு உதவியாள்... இப்படி  இளமைக் காலம் முழுவதும் வறுமைக்கு  பயந்து ஒவ்வொரு வேலைக்காக ஓடிக்கொண்டேயிருந்தேன். ஆறு  மாதம் அல்லது எட்டு மாதம் அவ்வளவு தான். அதற்கு மேல் எந்த வேளையிலும் நீடித்தது இல்லை.

கே: உங்கள் கதைகளில் சிறுவர்களே அதிகம் தென்படுகிறார்களே?
ப: ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவரவர் பால்ய காலத்தை எழுதுவது மிகுந்த விருப்பமானதாய் இருக்கும். என் கதைகளில் வரும் சிறுவர்கள் அனைவரும், ஏதேனும் ஒரு தருணத்தில் என் பல்யதைத் தொட்டவர்களாக இருப்பார்கள்.
கே: அப்படி என்றால் உங்கள் படைப்புகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளதா?
ப: நிச்சயமா. என்னை உரசிச் சென்ற                      
ஏதோ ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு
தான் கதை பின்னத்தொடங்குகிறேன்.
ஆனால், எது உண்மை? எது கற்பனை?
என்று வாசகர் பிரித்தறிய முடியாவண்ணம்,
எல்லாமே உண்மையாய் நடந்திருக்குமோ?
என்று நம்ப வைக்கும் வகையில் கதையை
அமைக்க முயல்கிறேன்.

கே: "ஜாதகம்" கதையில் மூட நம்பிக்கைகள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். சிறு வயதில் அது போன்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததா?
ப: சர்ச்சில் 'நன்மை' (பாதிரியார் தரும் அப்பம்) வாங்கும் போது-அது இயேசுவின் திருவுடல் என்று சொல்லப்பட்டதால் - அதை கடித்து தின்றால் அதிலிருந்து ரத்தம் வெளிவரும் என்றும் இயேசுவுக்கு வலிக்கும் என்றும் நம்பியிருக்கிறேன். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
கே: சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கிறீர்கள். அப்போது எப்படி உணர்வீர்கள்?
ப: என் வளர்ச்சியில் மகிழ்கிற நண்பர்கள் வாழ்த்துவார்கள். மனம்நிறைய உற்சாகமாய் இருக்கும். தொடர்ந்து எழுத வேண்டுமென்ற வேட்கை எழும்.

கே: "வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்" பற்றிச் சொல்லுங்கள்!
ப: காதல் கதிகள், பழி வாங்கும் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்கு கதைகள் என்றெல்லாம் இல்லாமல், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைகளைப் பதிவு செய்திருக்கிறேன் அத்தொகுப்பு முழுவதும். இன்றும் நேரில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அவர்களை எல்லாம். என்னில் விடுபட்ட பகுதிகளை மீண்டும் எழுது எழுது என்று தூண்டிக் கொண்டே இருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

கே: அடுத்த தொகுப்பு எப்போது?
ப: கடந்த தொகுப்புக்கு பட்ட கடனையே இன்னும் அடைக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நூலாக வெளியிட நாங்கள்  இருக்கிறோம் என்று உத்திரவாதம்  தரக்கூடிய தமிழ்ச்  சூழல் இருக்கிறதா? ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு வட்டம் இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் இயங்கும் படைப்பாளிகளே வெளிப்பட முடியும் என்கிற சூழல் அவலமானது. நாமும் ஒரு எழுத்தாளனாய் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற ஆசையில் கடனை உடனை வாங்கி, ஒரு தடவை புத்தகம் போட்டுவிட்டு காணமல் போனவர்கள் எத்தனை பேர். மேடையில் பாடுபவர் பணம் வாங்கிகொண்டு பாடுகிறார். பேச்சாளர் பணம் வாங்கிகொண்டு பேசுகிறார். ஆனால் எழுத்தாளன் மட்டும் பணம் கொடுத்தால் தான் புத்தகம் போட முடிகிறது.
கே: பிரசுரமான ஒருசில கதைகளின் தலைப்புக்கள் தொகுப்பில் மாற்றப்பட்டு உள்ளது பற்றி?
ப: தலைப்பை மட்டுமல்ல, கதைகள் உள்ளேயும் சில வரிகளைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியிருக்கிறேன். கதை பிரசுரமான சில நாட்களுக்குப் பிறகு, அதை சேர்த்திருக்கலாம், இதை தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் மனசுக்குள்  தோன்றும். தொகுப்பாக முயற்சிக்கும் போது அதை நிறைவேற்றிக் கொண்டேன்.

கே: இலக்கியம் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது?
ப: எனது இளம் பிராயத்தில் சின்னச் சின்ன  விஷயத்திற்கெல்லாம் பொசுக் போசுகென்று தற்கொலை எண்ணம் தோன்றும். பல முறை தற்கொலைக்கு முயன்று மீண்டிருக்கிறேன். அதனால் இன்று வரை உடல்நல பாதிப்புகள் தொடர்கின்றன. எந்த மனநல மருத்துவரிடமும் கவுன்சிலிங் செல்லாமல், சிகிச்சை எடுக்காமல், அந்த மாதிரி எண்ணங்கள் மாறிப் போனதற்கும் காரணம் இலக்கியம் தான். வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், நெருக்கடிகளை சமாளிக்கவும் நம்பிக்கையோடு வாழவும் கற்றுக்கொடுத்திருக்கிறது இலக்கியம். அது மட்டுமல்ல, வெகுஜன மக்களால் ஒதுக்கப் படுகிற மனிதர்களைக் கூட நேசிக்கவும், மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் பிளவுகள் ஏற்படுவதைக் கண்டு கொதிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறது இலக்கியம்.

கே: சிறுகதைகள் எழுத தூண்டியது எது?
ப: பதின் பருவத்தில் ராஜேஸ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் க்ரைம் நாவல்களை அநியாயத்துக்குப் படிப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நாவல்களைக் கூட படித்து விடுவேன். அதிகம் படிக்கிற எல்லோருக்கும் ஒரு கால கட்டத்தில் எழுத தோன்றுவதைப் போல, எனக்கும் ஆசை. அப்போதிருந்த முன்னோடி எழுத்தாளர்கள் எல்லோரின் நேர்காணல்களையும் ஆவலோடு படிப்பேன். அதிலெல்லாம் நாவல் எழுத வேண்டுமாயின் முதலில் சிறுகதைகளை எழுதிப் பழகுங்கள். எழுதும் முறையையும் நடையையும் வசப்படுத்திக் கொண்டு அப்புறம் நாவல் எழுத தொடங்கலாம் என்று அறிவுரைகள் சொல்வதை கவனித்திருக்கிறேன். அதனால் முதலில் சிறுகதைகள் எழுத முடிவெடுத்தேன்.

கே: க்ரைம் நாவல்கள் அதிகமாய் படித்ததாக சொல்கிறீர்கள். உங்கள் சிறுகதைகளில் அதன் சாயல் தெரியவில்லையே?
ப: ஆரம்பத்தில் நானும் அதே மாதிரியான கதைகளைத் தான் யோசித்து பழகினேன். துண்டு துக்கடா பத்திரிக்கைகளில் என் கதைகளும் வந்திருந்தன. பின்னாட்களில் தமுஎச வின் தொடர்பு கிடைத்த பிறகு மேலாண்மை பொன்னுசாமியின் பூக்காத மாலை சிறுகதை தொகுப்பு படிக்கக் கிடைத்தது. கட்டிலில் படுத்தவாறே படித்துக் கொண்டிருந்தவன் சடாரென எழுந்து உட்கார்ந்து யோசிக்க தொடங்கினேன். என்னுள் வேறொரு வாசலை திறந்து விட்டிருந்தது அத்தொகுப்பு. அதன் பிறகு என் வாசிப்பு பழக்கங்கள் அடியோடு மாறிவிட்டிருந்தது. ச.தமிழ்செல்வன், கந்தர்வன், வண்ணதாசன், வண்ணநிலவன், பெருமாள்முருகன், சுந்தரராமசாமி என்று கொஞ்சம் கொஞ்சமாய் என் பாதையை மாற்றத் தொடங்கினேன். அதுவரை சிற்றிதழ்கள் பற்றி எதுவுமே தெரிந்திராத எனக்கு கவிஞர் மா.காளிதாஸ் சிற்றிதழ்களை அறிமுகப் படுத்தி வாசிப்பு பழக்கத்தை மாற்றினார்.

கே; நல்ல சிறுகதை ஆசிரியராய் பெயர் எடுத்து  விட்டீர்கள். நாவல் எப்போது?
ப: 'வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்' நூல் வெளியிட்டதும் அடுத்தது நாவல் தான் என்று முடிவு செய்திருந்தேன். எனது இளம் பிராய வாழ்க்கை முழுவதும் வழிகளும் குரூரங்களும் ரணங்களும் நிறைந்தவை. உளவியல் ரீதியாக நிறைய பாதிக்கப் பட்டிருந்தேன். அதை மையமாக வைத்து நாவல் எழுத தொடங்கினேன். ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதிய பிறகு உடல் ரீதியாக சில கோளாறுகள், எழுதுவதற்கும் படிப்பதற்கும் சிரமபடுத்தும் வகையில் கண்களில் பிரச்னைகள் வரத் தொடங்கியது. அதனால் எல்லாம் தடைபட்டு விட்டது. உடல் சாதகமாய் மாறும் போது, நிச்சயம் நாவல் வெளிவரும்.

கே:கவிதைகளும் எழுத தொடக்கி விட்டீகளே?
ப:இதற்கும் மேலே சொன்ன காரணம் தான். சிறுகதை, நாவல் என்று பக்கம் பக்கமாய் எழுத உடல் ஒத்துழைக்கத போது, நாலு வரி, பத்து வரியில் முடித்துவிடலாமே என்றெண்ணி கவிதை எழுத தொடங்கினேன். ஆனால் பத்து, இருபது பக்கங்கள் எழுதும் போது படாத சிரமங்களையெல்லாம், நான்கு வரிகளுள் ஒரு விஷத்தை கவிதையாய் சொல்வதற்குப் பட வேண்டியிருக்கிறது.

கே:சிறுகதைகள், கவிதைகள் எது சிறந்தது?
ப:சமூக அநீதிகளை குத்திச் சாய்க்கிற ஆயுதங்களாய்ச் செயல்படுவதில் இரண்டுமே கூர்மையாகவும் பதமாகவும் அதனதன் கடமைகளைச் சரியாய்ச் செய்கின்றன.

கே: சஞ்சீவி தாஸ் என்ற பெயரை புதுகை சஞ்சீவி என்று மாற்றக் காரணம்?
ப: ஆரம்பத்தில் எஸ்.சஞ்சீவி தாஸ் என்கிற பெயரில் தான் எழுத தொடங்கினேன். பிறகு பெயரோடு ஊரைச் செதுக்கலாம? என்று யோசித்தேன். ஒரு நாள் நண்பர்களிடம் அந்த எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். அப்போது எனது நண்பர் ஒருவர் நியுமராலஜி கற்றுக்கொண்டிருந்தார். அவர் உடனே பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு, வெகு நேரத்திற்கு கணக்குப் போட்டுப் பார்த்தார். உங்கள் பிறந்த தேதியைக் கூட்டினால் ஐந்து வருகிறது. நியுமராலஜிப் படி எஸ்.சஞ்சீவி தாஸ் என்பதைக் கூட்டினாலும் ஐந்து வருகிறது. அதனால எஸ்.சஞ்சீவி தாஸ்ங்கிற பேர்ல எழுதுனா டாப்பா வருவீங்க. புதுகை சஞ்சீவிங்கிற பேர கூட்டினா மூணு தான் வருது. 5 -க்கும் 3-க்கும் ஒத்துப் போகாது. அதனால புதுகை சஞ்சீவிங்கிற பேரு வேண்டாம் என்றார். புதுகை சஞ்சீவிண்ணே எழுதிப் பார்ப்போமே என்று வீராப்பு தோன்றியது எனக்கு. அப்படியே தொடர்ந்து விட்டேன்.

கே: நீங்கள் எழுதியவற்றில் எழுதியிருக்க வேண்டாம் என்று பின்னாளில் எண்ணிய படைப்பு உண்டா?

ப: உண்மையை சொல்லனும்னா "குதிரைக் கொம்பு" கதை தான். அந்தக் கதை வெளியானதும் எனக்கு தொடர்ச்சியாய் ஏராளமான போன் கால்கள். அதைப் படித்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஒவ்வொரு எழுத்தாளனும் புதுசா எழுத வரும்போது, அவனை காயடிக்கிற வேலைகள் நெறைய நடக்கும். அதுக்காக வரும் போதே கையில வாளேந்தி, வாங்கடா மோதிப் பாக்கலாம் என்கிற மாதிரி இப்படியொரு படைப்பு தேவையா என்றார். ஆதவன் தீட்சண்யா தொடர்புக் கொண்டு, "உன்னோடு பழகிய உன் நட்பு வட்டாரங்களையே கதா பாத்திரங்களாக்கி அவர்களையேப் பகைத்துக் கொள்கிற மாதிரி, எழுதியிருக்க வேண்டாமே சஞ்சீவி..." என்றார். "இனிமேல் எழுத வேண்டாம்" என்ற அன்பு வேண்டுகோள் விடுத்தார் மேலாண்மை பொன்னுசாமி.
       கோபமாகவும் எதிர்ப்பாகவும் கூட நிறைய பேர் என்னிடம் அக்கதை குறித்து நேரிலும் தொலைபேசியிலும் வாதிட்டார்கள். இன்னொரு பக்கம் அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான ஆதரவுகளையும், புதிய நட்பு வட்டாரங்களையும் தேடிக் கொண்டு வந்திருந்தது அக்கதை.
       சலனங்கள் அடங்கிய பிறகு, என் கோபம் தணிந்திருந்த நிலையில், அக் கதையை எழுதியிருக்க வேண்டாமோ என்று நினைத்திருக்கிறேன்.

கே: தங்கள் இலக்கிய நட்பு வட்டம் பற்றியும், உங்கள் முன்னேற்றத்தில் அவர்களின் பங்கு பற்றியும் கூறுங்கள்?
ப: நான் கொஞ்ச காலம் எழுதாமல் இருக்கிறேன் என்றால், அந்தக் கால கட்டத்தில் என் இலக்கிய நட்பு வட்டாரத்தின் தொடர்புகள் குறைந்திருக்கும். கடிதங்கள் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் நண்பர்களோடு பேசத் தொடங்குகிற நாட்களில் படைப்பின் வெளிப்பாடு அதிகமாய் இருக்கும். காரணம், ஒத்த சிந்தனையிலிருக்கும் நபர்கள் கூட்டாய்ச் சேரும் போது செயல்படுவதற்கான மன உந்து சக்தி கிடைப்பது தான். அது மட்டுமல்ல, எனது நண்பர்கள் படைப்பின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி என்னைச் செதுக்குகிறார்கள். நிறைய இடங்களில் என் கதைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
        அவர்களில் பா.திருச்செந்தாழை, ஸ்ரீ சங்கர், செந்தி, லெஷ்மி சரவணகுமார், விஜய் மகேந்திரன், சுரேஷ் மான்யா, சு.மதியழகன், இதய யேசுராஜ், இரா.பிரபாகர், பாரதி கிருஷ்ணன், யாழி, பிராங்க்ளின் குமார், நாணற் காடன், வெ.சந்திரமோகன், மா.காளிதாஸ், இரா.தனிக்கொடி, தீபம் முது, நாகை ஜவஹர், மணிநாத், ந.பெரியசாமி, ஆர்.ஜெயசரவணன், சூர்யா சுரேஷ், தாண்டவகோன், திருக்குமரேசன், உமாசக்தி என்று நீள்கிறது நட்பு வட்டாரம்.

கே: நவீன இலக்கியம் பற்றி?
ப: வழக்கமான சொல் முறைகளைக் கட்டுடைப்பதும், புதிய கோணத்தில் புதிய புதிய பார்வையைச் செலுத்துவதும், சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதுமான நவீன இலக்கியம் எனக்கு வெகுவாய்ப் பிடிக்கும். ஆனால் புதிதாய் எழுத வருபவர்களில் சிலர், காமத்தையும் அது சார்ந்த குற்றத்தையும் எழுதினாலே, நவீனமாய் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று நினைத்துக்கொண்டு, காமத்தையும் பாலியலையும் வேண்டுமென்றே வலிய திணிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் வாழ்க்கையை நவீனக் கூறுகளுடன் பதிவு செய்கின்ற 'பெருமாள் முருகன், ஆதவன் தீட்சண்யா' ஆகியோரின் கதைகள் என்னை வெகுவாய்க் கவர்கின்றன.


கே: நவீன இலக்கியம் வாசகர்களிடம் போய்ச் சேர்கிறதா?
ப: எந்த வாசகர்களிடம் என்ற கேள்வி எழுகிறது. வெகுஜன வாசகர்களைக் கேட்கிறீர்களா?
         நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை, என் படைப்பை நீ வாசி, உன் படைப்பை நான் வாசிக்கிறேன் என்பது போன்ற எழுதப் படாத ஒப்பந்தம் இலக்கியவாதிகளிடம் நிலவிக் கொண்டிருக்கிறது.
        மக்களுக்கென எழுதுவதை விட்டு விட்டு இதர படைப்பாளர்களிடம் பெயர் வாங்க வேண்டுமென்ற உந்துதல் நவீவ படைப்பாளர்களிடம் தலை தூக்கி நிற்கிறது. எனக்கும் நவீனம் தெரியும் என்று நிரூபித்து விட்டு, பிறகு வெகுஜன மக்களிடம் போய்ச் சேர ஞானோதயத்தால் எழுத்தில் இறுக்கத்தைத் தலத்திக் கொண்டு வெகுஜனப் பத்திரிக்கைக்குத் திரும்புகிற பல பேரை நான் கவனித்திருக்கிறேன்.

கே: கடவுள் பற்றிக் கூறுங்கள்?
ப: படைப்புகள் மூலமாகவும் சரி, பெரியோர்கள் மூலமாகவும் சரி. பொதுவாக அறிவுரைகள் கூறுபவர்களைக் கண்டால் எல்லோருக்கும் கசக்கும். பிடிக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் கூற வேண்டியக் கருத்துக்களை கடவுளின் பெயரால் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக நம் உடம்பில் இயங்கும் பிராண சக்திக்கு இரண்டே வேலைகள் தான். ஒன்று நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துப் பொருட்களை உள் இழுத்துக் கொள்வது, மற்றொன்று அவ்வாறு உள் இழுத்துக் கொள்ள இயலாத கழிவுப் பொருள்களையும், நச்சுப் பொருள்களையும் வெளியேத் தள்ளுவது. ஆனால் இவ்விரண்டு காரியங்களையும் ஒரே நேரத்தில் அதனால் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை தான் அதனால் செய்ய முடியும். வெளித்தள்ளும் காரியம் நிகழும் சமயத்தையே நோய்க்காலம் என்று சொல்கிறோம். அந்த நோய்க்காலம் நீண்டு கொண்டே போகாமல், சுருக்கமாக அமைய வேண்டும் என்று விரும்பினால், வெளித்தள்ளும் வேலையைத் தவிர, உள் இழுக்கும் வேலையை நம் பிராண சக்திக்கு நாம் கொடுக்கக் கூடாது. அதாவது நாம் விரைவில் நோய்த் நீங்கி குணம் அடைய, உணவு அருந்தக் கூடாது என்று இயற்கை வைத்தியம் சொல்கிறது.
          இப்படியெல்லாம் உண்ணாவிரதத்தின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் சொல்லி நம் மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது கடினம் என்று நினைத்தோ என்னவோ, கடவுளின், பெயரால் வாரக் கணக்கில் விரதங்களை உண்டாக்கியிருக்கிறார்கள்.
          அது மட்டுமல்ல. இருக்கும் அத்தனை மரங்களிலும் அதிகமான ஆக்சிஜனை வெளியிடுவது ஆலமரமும் வேப்ப மரமும் தான். அந்த மரங்களுக்கு கீழே அரை மணி நேரம் நின்றாலே, உடல் புத்துணர்ச்சி பெரும். அதனால் அம்மரங்களுக்கு கீழ் பிள்ளையாரை உட்க்கார வைத்து, மக்களை சாமி கும்பிட அனுப்பியிருக்கிறார்கள். மிகக் குறைந்த ஆக்ஸிஜனும் அதிகளவில் கரியமில வாயுவையும் வெளியிடுகின்ற புளிய மரத்தில், பேய் இருக்கிறதென்று சொல்லிவிட்டார்கள்.
          இன்னொரு விஷயம், மூளையை புத்துணர்ச்சியாகவும் சுறு சுறுப்பாகவும் வைத்துக் கொள்வதற்கான யோகப் பயிற்சிகளை இப்போது அமெரிக்காவில் காசை வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கிறார்கள். அது வேறொன்றும் இல்லை. நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்து, நம் ஆட்கள் காலம் காலமாய்க் கடைப்பிடிப்பது தான்.
          கைகளை மாற்றி தலையின் இருபுறமும் பனிரெண்டு முறை கொட்டிக் கொள்வது. பின் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடுவது. இதைத் தான் பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நம் ஆட்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள். சரியாக படிக்காத மாணவனை தோப்புக்கரணம் போடச் சொல்வதும் மூளைக்கான யோக தான்.
          இப்படி நமக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் சாமியின் பெயராலும், கடவுளின் பெயராலும் சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டுமானாலும், என்னால் முடியும், நான் ஜெயிப்பேன் என்று நம்பினால், நிச்சயமாய் அந்த நம்பிக்கையே மன உந்து சக்தியைக் கொடுத்து வெற்றிக்காக உழைக்கவும், அதை நோக்கி நகர்த்தவும் செய்யும். இதையெல்லாம் ஏன் மக்கள்கிட்ட சொல்லிக்கிட்டு... சாமிய. அது குடுக்கும்னு சுலபமா சொல்லி வச்சுட்டாங்க.

No comments:

Post a Comment